My Village

Monday, February 17, 2014

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது எங்கள் கிராமம்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது எங்கள் கிராமம். என்ன, எனது கிராமத்தில் இருந்து சிதம்பரத்துக்கு குறுக்கு வழியில் போனால் கூட 100 கிலோ மீட்டர் தூரம்.

Wednesday, February 12, 2014

கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு

கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு

 

அரியலூர் அருகே அம்பலவர்கட்டளை கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் (1012-1044) கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று பிச்சாண்டவருக்கு பூப்போடுதல் விழா சிறப்பாக நடைபெறும். அதேபோல, சித்திரை மாத அமாவாசையன்று அமுது படையல் விழாவும் நடைபெறும்.

 

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்து, இக்கோயிலில் நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி அமைந்துள்ளது. இதில், ஒவ்வோர் ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும்.

 

இந்தக் கோயில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறாமல் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை அம்பலவர் கட்டளை கிராம மக்கள் மற்றும் இறையன்பர்கள் இணைந்து திருப்பணி செய்தனர். இதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து 4 கால யாக பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை பூர்ணாஹூதியும், அதைத் தொடர்ந்து யாத்ரா தானம், கலச புறப்பாடும் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் கும்பங்களுக்கு புனிதநீரை ஊற்றினர்.

 

குடமுழுக்கு விழாவில், அரியலூர் வட்டாட்சியர் முருகன், தொழிலதிபர் கதிர் கணேசன், சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் க. மணிவண்ணன், ஊராட்சித் தலைவர் வேம்பு பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் கருணாநிதி மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Monday, February 10, 2014

எங்கள் பகுதி செய்தி: ஆயிரம் ஆண்டு பழைமையான காமரசவல்லி சௌந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோவில் குடமுழுக்கு  ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள காமரசவல்லி அருள்மிகு பாலாம்பிகை சமேத சௌந்தரேசுவர சுவாமி கோவில் சுந்தர சோழ மன்னரால் சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்பு (கிபி.957-974) கட்டப்பட்டது. பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து விட அவரது மகன் ஜனமேஜெயராஜா  உலகில் உள்ள அனைத்து பாம்புகளும் அழிந்து விட எண்ணி சர்ப்ப யாகம் செய்த போது உலகில் உள்ள எல்லா பாம்புகளும் யாகத்தீயில் விழுந்து இறந்து விட பாம்புகளின் தலைவனான கார்கோடன்  மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்க மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில்  உள்ள சிவபெருமானை வழிபட்டு தனது குலம் தழைக்க வரத்தினை கடக லக்னம்,கடக ராசியில் பெற்றார். மேலும் ஸ்ரீகார்கோடேஸ்வரர்  இரண்டு கட்டளைகளை பிறப்பித்தார்.

 

தன்னை யார் வந்து வணங்கினாலும் சர்ப்ப தோஷ விளைவுகளான திருமணத்தடை, உத்தியோகத்தடை, புத்திரபாக்கியமின்மை, தம்பதிக்குள் மன வேற்றுமை, பிரிவுகள், கல்வித்தடை போன்றவற்றிற்கு நிவர்த்தி தலமாக இருக்க வேண்டும். இந்த ஊரில் யாரையும் ஸர்ப்பம் தீண்டக்கூடாது, அப்படியே தீண்டினாலும், உயிரிழக்கக்கூடாது. என்று உறுதி வாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து, இன்று வரை காமரசவல்லி கிராமத்தில் ஸர்ப்பம் தீண்டி இறந்தவர்கள் யாருமில்லை.  இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பழைமையான இத்திருத்தலத்தின் திருப்பணிகள் அரசு மானியம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்  பொது நல நிதி, ஸ்ரீரங்கம் கோவில் நிதி, மற்றும் நன்கொடையாளர்கள் நிதியை கொண்டும், சென்னையைச் சேர்ந்த  மகாலெட்சுமி சுப்பிரமணியன், ஜி.வெங்கடேஷ், மும்பை வை.ரகுநாதன், ஆகியோரின் பெருமுயற்சியாலும் நடைபெற்றது.

 

விழாவில் திருவையாறு ஆதீனம் கட்டளை தம்பிரான் மவுனகுருசாமிகள், துரை.மணிவேல் எம்எல்ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, உதவி ஆணையர்(இந்து சம்ய அறநிலையத்துறை) ஜெகநாதன்,திருக்கோவில் செயல் அலுவலர் மணி, வட்டாட்சியர் முருகன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அன்பழகன், மருத்துவர் மணிவண்ணன், காமரசவல்லி ஊராட்சி மன்றத் தலைவர் சிவாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நன்றி தினமணிக்கு